80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமையலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு அந்த வலைப்பதிவு எந்தவித சுவாரஸ்யத்தையும் அளிக்காமல் போகலாம்.

ஆனால் அந்த வலைப்பதிவை எழுதி வருபவர் 80 வயதை கடந்த பெண்மணி என்பது ஆச்சர்யத்தை அளிக்க கூடிய விஷயம்.(அவரது பெயர் காமாட்சி.காமாட்சி பாட்டி என்று சொல்லலாம்.அல்லது மரியாதை கருதி காமாட்சி அம்மாள் எனலாம்)அதை விட ஆச்சர்யம் அந்த வலைப்பதிவை அவர் எழுதி வரும் விதம்.

ஒரு நல்ல வலைப்பதிவுக்கு சொல்லப்படக்கூடிய அடைப்படையான அம்சங்கள் அனைத்தையும் இந்த வலைப்பதிவு பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கிறது.வலைப்பதிவுக்கு என்று ஒரு மைய நோக்கம்,தொடர்ச்சியான பதிவுகள்,பின்னூட்டம் மூலமான உரையாடல் போன்ற அம்சங்களை கொண்டு பார்த்தால் தமிழின் சிறந்த வலைப்பதிவுகளின் பட்டியலில் இந்த வலைப்பதிவிற்கு சிறப்பு அனுமதியோடு இடம் அளிக்கலாம்.

அதைவிட முக்கியமாக இந்த வலைப்பதிவில் வெளிப்படும் பகிர்தலின் ஆர்வம் பாராட்டத்தக்கது.வரவேற்கத்தக்கது.அந்த பகிர்தலில் வெளிப்படும் அனுபவத்தின் கீற்றுகளும் வெளிப்பாடத தன் முனைப்பின் சாயலும் இன்னும் கூட வரவேற்கத்தக்கது.

சமையல் குறிப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த வலைப்பதிவை பயனுள்ளதாக கருதுவார்கள்.கருதி தொடர்ந்து வருகை தருவார்கள்.காரணம் தொடர்ச்சியாக புதிய புதிய சமையல் குறிப்புகள் இடம் பெற்று வருவது தான்.ஏற்கனவே பதிவிடப்பட்ட குறிப்புகள் அவற்றின் பிரிவுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலை பார்த்தால் ஒரு முழுமையான‌ சமையல் குறிப்பு புத்தகத்தின் தன்மை கொண்டிருப்பதை உணரலாம்.இந்த வலைப்பதிவின் செறிவின் சான்று இது.

வலைப்பதிவின் எழுத்து நடை அலங்காரமோ மேல்பூச்சோ இல்லாமல் எளிமையானதாக இருக்கிறது.நேரிடையாக பேசும் தன்மையோடு எந்த வித நீட்டி முழக்கலும் இல்லாமல் எடுத்த எடுப்பில் விஷயத்திற்கு வந்து விடுகிறார் காமாட்சி அம்மாள்.இந்த எளிமை சமையலில் ஆர்வம் உள்ளவர்கள் புதிய உனவு வகைகளை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

80 வயதில் காமாட்சி அம்மாள் இப்படி சுறுசுறுப்பாக பதிவிடுவது ஆச்சர்யமான விஷயம் தான்!.

பதிவுலகிற்கு அவர் வந்த விதத்தை விவரிக்கும் அவரது அறிமுக குறிப்பை படித்தால் இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது.காலம் தந்த பணிவு,இந்த வயதிலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இரண்டையும் அந்த குறிப்புகளில் பார்க்கலாம்.

ஒரு வருடம் முன் வரை கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியாது ,இப்போது சிறிது தெரிகிறது என ஆரம்பித்து தான் வலைபதிவு செய்யத்துவங்கிய காரண‌த்தை காமாட்சி அம்மாள் விளக்கியிருக்கிறார்.

அந்த அறிமுக கதையில் இந்திய பெண்களின் சொல்லப்படாத சோகமும் கல்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.எதிர் நீச்சல் போடுவதிலும் என்ன செய்வது என யோசிப்பதிலுமே காலம் போய்விட்டதாக குறிப்பிடுவதை படிக்கும் போது மிடில் கிளாஸ் பெண்களின் கைகளில் மாட்டப்பட்ட கண்ணுக்கு தெரியாத கை விளங்களின் சுமையை உணர முடிகிறது.

இளம் வயதில் எழுத்தார்வம் மிக்கவராக இருந்தவர் கலியாண வாழ்க்கைக்கு பின் அந்த தொடர்புகள் அறவே விடுபட்டு குடும்பத்தின் பொறுப்புகளால் நேரமின்மை ஏற்பட்டதாக குறிப்பிடுகிறார்.

தற்போது கடைசி மகனோடு பனிபொழியும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் காமாட்சியம்மாள் மகனின் உதவியோடு கம்ப்யூட்டர் பழகி விகடன் ஆர்வத்தால் பின்னூட்டங்களில் துவங்கி பின்னர் வலைப்பதிவு பற்றி தெரிந்து கொண்டு சொல்லுகிறேன் பதிவை துவக்கியிருக்கிறார்.

தொடர்ந்து சுறுசுறுப்போடு குறிப்புகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.அத்தையாக,பாட்டியாக,தாயாக பாவித்து எனக்கு ஊக்கம் கொடுங்கள்,எழுதுகிறேன்,வலைப்பதிவை உபயோகிப்பதில் எனக்கு ஆசானாக இருந்ந்து கற்று கொடுங்கள் என்ற கோரிக்கையோடு முடித்திருக்கிறார்.80 வயதில் தனக்கு தெரியாததை பிரரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஆசானாக இருங்கள் என்று சொல்லும் பணிவும் அசாத்தியமானது இல்லையா?

(காமாட்சி அம்மாள் உண்மையில் நாங்கள் தான் உங்களிடன் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு கம்புயூட்டர் தான் தெரியவில்லை,வாழ்க்கை தெரிந்திருக்கிறது. )

பின்னூட்டம் ஒன்றில் பாட்டி கலக்குகிறீர்கள் என்னும் பாராட்டிற்கு கலக்கவில்லை எழுதுகிறேன் என பதில் சொல்லி இருப்பதை பார்க்கும் போது இன்னும் வியப்பாக இருக்கிறது.

சமையல் குறிப்புகளிலும் இந்த பின்னூட்ட உரையாடலை பார்க்க முடிகிறது.பலர் குறிப்புகளை படித்து சமைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.அவற்றுக்கெல்லாம் உற்சாகமாக கருத்து தெரிவித்திருக்கிறார். பதிவுலகில் இருக்கும் அவரது விசிறியான இன்னொரு பதிவர் ரஞ்சனியுடனான உரையாடலையும் பார்க்க முடிகிற‌து.

நமது தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் கம்ப்யூட்டர் கற்று கொடுத்து அவர்களை வலைப்பதிவுக்கும் குறும்பதிவுக்கும் கொண்டு வந்து அவர்களில் அனுபவ பாடங்களை காத்தின் சுவடுகளை பதிவு செய்ய வைக்க வேண்டும் என்பதற்கு காமாட்சி அம்மாள் அழகான உதாரண‌ம்.

காமாட்சி அம்மாளுக்கு எனது ஒரே யோசனை ,அல்ல வேண்டுகோள் சமையல் குறிப்புகளில் இருந்து சற்றே விலகி உங்கள் வாழ்க்கை அனுபவங்களை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது தான்.

வலைப்பதிவு முகவரி;http://chollukireen.wordpress.com/

25 responses to “80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!

  1. அன்புள்ள சிம்மன் அவர்களுக்கு,
    திருமதி காமாட்சி அவர்களைப்பற்றி எழுதியதற்கு கோடானுகோடி நன்றிகள். அவர்களைப் பற்றி உங்கள் இணையதளத்தில் எழுதியதற்கு நான் காரணம் என்று நினைக்க மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்கள் பதிவு கண்டவுடன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் பாராட்டுக்களையும் தெரிவித்து விட்டேன்.
    என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எழுதியதற்கு நன்றிகள் பல பல.
    இன்னொருவரைப் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
    திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் சுட்டிக்கதை என்று ப்ளாக்ஸ்பாட் – டில் எழுதுகிறார்.
    உங்கள் எழுத்து பலரையும் போய் சேருவதால் இவர்களின் சாதனைகள் உலகம் முழுக்க தெரிய வரும் என்பதால் இந்த வேண்டுகோள்.
    நன்றியுடன்,
    ரஞ்ஜனி

  2. திரு சிம்மன் அவர்களுக்கு,
    என்னை திருமதி காமாட்சியின் மகளாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவரது விசிறி நான். அவரது எழுத்துக்களை மிகவும் விரும்பி என் மகளுக்கும் அவரது சமையல் குறிப்புகளை அனுப்பி வைப்பவள் நான்.
    இன்று தான் முதல் முறையாக அவருடன் போனில் பேசினேன்.
    அவரும் நானும் பின்னூட்டம் மூலமாகவே நிறைய பேசிக் கொள்ளுவோம். அதனால் தாய், மகள் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. இதுவும் ஒரு சந்தோஷம் தான்!

    நீங்கள் சொல்லியிருப்பது போலவே நானும் அவர்களை அவர்களது அனுபவங்களை எழுதுங்கள் என்று அடிக்கடி கேட்டுக் கொள்ளுவேன்.

    இன்னொரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேற்று திருமதி காமாட்சி அவர்களின் 58 வது வருட திருமண நிறைவு நாள்.
    மாமாவுடன் அவரது வாழ்க்கை நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

    • மகள் என குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். திருத்தி விடுகிறேன்.காமாட்சி அம்மாளுக்கு எனது வணக்கம் கலந்த வாழ்த்துக்கள்.

      அன்புடன் சிம்மன்

      • மன்னிப்பு என்றெல்லாம் சொல்லாதீர்கள் திரு சிம்மன். நிஜமாகவே அவருடன் வலைத்தளத்தில் ஆரம்பித்த உறவு மிகவும் இதமான உறவாக அமைந்து விட்டது! சிலரிடம் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு நெருக்கம் வரும், இல்லையா?
        என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து எழுதியதற்கு நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

        நன்றியுடன்,
        ரஞ்ஜனி

      • பரிந்துரைத்தமைக்கு நன்றி.தங்கள் பதிவுகளும் தொடர வாழ்த்துக்கள்.உங்களை போன்ற பெரியவர்கள் பதிவுலகில் ஆர்வம் காட்டுவது மக்ழிச்சி.

        அன்புடன் சிம்மன்

  3. பிங்குபாக்: 80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு! « ranjani narayanan·

  4. என்னைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். மனமுவந்து என்னை அறிந்து எழுதியிருக்கிறீர்கள். எப்படி இவ்வளவு
    துல்லியமாக அறியமுடிந்தது உங்களால் என, மனதின்
    உணர்ச்சியால் கண்களினின்றும் பெருகும் கண்ணீரிடையே இந்த பதிலை உங்களுக்கு எழுதுகிறேன்.
    நாடக மொழியில் எழுதுவதென்றால் தன்யனானேன்.வெகு நாட்களாகவே சமையலை விடமுடியாமல் வேறு ஸப்ஜெட்டுக்கு போகாமல் ிருந்து கொண்டுஇருக்கிறேன். கட்டாயம் மாற்ற முயற்சிக்கிறேன்.
    என்னை யாவருக்கும் அறிமுகப்படுத்தியதில் உங்கள் பங்கு அமோகம். நன்றியும் ஆசியுடனும். சொல்லுகிறேன்..
    ரஜ்ஜனிநாராயணனுக்கும் நன்றி

    • தங்கள் நெகிழ்ச்சியான பாராட்டுக்கு நன்றி.தங்களின் முய‌ற்சியை அறிமுகம் செய்ய முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.தங்கள் பணி தொடர‌ வாழ்த்துக்கள்.

      அன்புடன் சிம்மன்

  5. ஆகா ஆகா – நேற்றுதான் ( 02.09.2012 ) எங்களின் 39 வது ஆண்டு திருமண நிறைவு நாள் . காமாட்சி அம்மாவிற்கும் நேற்று தான் திருமண் நாள் அன்பதனை அறியும் போது மிக்க மகிழ்ச்சி – நட்புடன் சீனா

  6. Cybersimman,
    காமாட்சி அம்மாவைப்பற்றிய அறிமுகப் பதிவு மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.நல்ல ஆரோக்கியத்துடன் இன்று போல் எப்போதுமே அவர் எங்களுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசையும்.விமர்சனத்திற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s