நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களிடமும் அந்த பழக்கம் இருக்கலாம். அது, கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித்து வைக்கும் பழக்கம். கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எல்லோரும் செய்வது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்து வைப்பது எளிதானது, இயலாபாது. சுலபமானது ! அதே நேரத்தில் பாதகமானது என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர். இமெயிலில் வரும் இணைப்புகளில் துவங்கி , இணையத்தில் டவுண்லோடு செய்யும் புகைப்படம் மற்றும் யூடியூப் வீடியோ என எல்லாவற்றையும் டெஸ்க்டாப்பிலேயே சேமித்து வைப்பது எளிதானது தான். அடுத்த முறை தேவைப்படும் போது எளிதாக கண்ணில் படும். அதோடு ஒரே கிளிக்கில் சேமித்துவிடலாம். தனியே கோப்புகளை தேடி அதற்கென பெயரிட வேண்டிய தேவை கிடையாது.
கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்பதில் உள்ள இது போன்ற சாதகங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்பது அதனால் தானே! பலரது கம்ப்யூட்டரை பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம்.டெஸ்க்டாப் முழுவதும் தபால்தலை ஒட்டப்பட்டது போல ஐகான்களாக காட்சி அளிக்கும். சிலர் டெஸ்க்டாப் முழுவதும் இப்படி ஐகான்களாக நிரப்பியிருப்பார்கள். இவற்றில் பெரும்பாலானவை சேமிக்கப்பட்ட கோப்புகள் தான் !
ஆனால் டெஸ்க்டாப் சேமிப்பில் பாதகமான அம்சங்களும் பல இருக்கின்றன தெரியுமா? முதல் பாதிப்பு உங்களுக்கே தெரிந்திருக்கலாம்.கோப்புகளை அடுக்கி கொண்டே இருந்தால் அது உங்கள் டெஸ்க்டாப்பின் தோற்றத்தை பாதிக்கும். கோப்புகள் நிறைந்த டெஸ்க்டாப் கூட்டப்படாத குப்பைகள் நிறைந்த அறை போல சுத்தமில்லாமல் காட்சி அளிக்கலாம். எனினும் இந்த அழகியல் பாதிப்பு கூட பெரிய விஷயமல்ல, டெஸ்க்டாப் கோப்புகள் கம்ப்யூட்டரின் வேகத்தை மட்டுப்படுத்தலாம் என்கிறது ’தி கம்ப்யூட்டர் டியூட்டர்’ இணையதளம். டெஸ்க்டாப் சேமிப்பு தொடர்பான பி.சி வேர்ல்டு கட்டுரை இந்த முறையில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என எச்சரிக்கிறது. கோப்புகள் அதிகரிக்கும் போது குழப்பமாகி எந்த கோப்பு எங்கிருக்கிறது எனத்தெரியாமல் போய்விடலாம் என்பது மட்டும் அல்ல, டெஸ்க்டாப்பில் உள்ள கோப்புகளுக்கு பாதுகாப்பும் கிடையாது ,பேக் அப்பும் கிடையாது என்பது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியது.
கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் முதலில் டெஸ்க்டாப்பில் உள்ளவற்றை தான் பதம் பார்க்கும். கோப்புகளை பேக் அப் எடுக்க பயன்படுத்தும் புரோகிம்களும் பெரும்பாலும் டெஸ்க்டாப்பில் உள்ளவற்றை சேமிப்பதில்லை. எனவே , ஏதேனும் பாதிப்பு என்றால் டெஸ்க்டாப் கோப்புகளை இழக்க நேரலாம். அவற்றி திரும்ப பெற முடியாது. அதனால் தான் கோப்புகளை வைப்பதற்கு டெஸ்க்டாப் ஏற்ற இடம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
சரி கோப்புகளை எங்கே சேமித்து வைப்பது? கம்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான் ஏற்ற இடம் என்கின்றனர். ஹார்ட் டிஸ்க்கிலும் ஒரே இடத்தில் எல்லா கோப்புகளை சேமிக்க கூடாது ,வெவ்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்கின்றனர். நீதி முதலீட்டுக்கான ஆலோசனை போல தான் இதுவும். மூதலீட்டுக்கு பாதுகாப்பு தேவை என்றால் எல்லா சேமிப்பையும் ஒரே வழியில் சேமித்து வைக்கமால், வைப்பு நிதியில் கொஞ்சம், பங்குச்சந்தையில் கொஞ்சம், தங்கத்தில் கொஞ்சம் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்பார்கள். அதே போல தான் ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்கும் போதும் , அதில் உள்ள சி அல்லது டி பகுதியிலோ தனித்தனியாக சேமிக்கலாம். அதிலும் குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளதோ , அதை தவிர்த்து மற்ற பகுதிகளில் கோப்புகளை வைக்க வேண்டும். ஏனெனில் வைரஸ் அல்லது மால்வேர் பாதிப்பால் ஆப்பரேடிங் சிஸ்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட முக்கிய கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். ஏதேனும் காரணத்திற்காக விண்டோசை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நேர்ந்தாலும் கோப்புகளை தனியே சேமிக்க வேண்டாம்.
அதே போல விண்டோஸ் பயனாளிகள் என்றால் மைடாக்குமண்ட்ஸ் வசதியை பயன்படுத்தலாம். மை டாக்குமண்ட்ஸ் என்பது உண்மையில் உங்களுக்காக நூலகம் போல தான். புகைப்படஙக்ள், இசை கோப்புகள்,வீடியோ கோப்புகள் மற்றும் சாதாரண கோப்புகள் என நான்கு வகையான கோப்புகளை சேமிக்கும் வசதி கொண்ட நூலகம். புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவற்றுக்கான நூலக பகுதியில் சேமித்து கொள்ளலாம்.
இவற்றைத்தவிர தற்போது பிரபலமாக உள்ள வழி, கிளவுட் சேமிப்பை பயன்படுத்துவது. முக்கிய கோப்புகள் என்றால் கூகிள் டிரைவ் அல்லது டிராப் பாக்ஸ் அல்லது ஒன் டிரைவ் சேவைகளில் முக்கிய கோப்புகளை சேமித்து வைக்கலாம். ஆனால் கிளவுட் சேவைகளை பயன்படுத்தும் போது பிரைவசி எனப்படும் அந்தரங்க மீறல் பிரச்சனைகள் இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கிளவிடில் பகிரப்படும் கோப்புகள் பொது வெளியில் இருப்பதால் தனிப்பட்ட தகவல்கள் கொண்ட கோப்புகள் அல்லது முக்கிய ஆவணங்களை சேமிக்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும்.
ஆக, முதலில் டெஸ்க்டாப்பில் கோப்புகளை வைக்கும் பழக்கத்தை கைவிடுங்கள் என்பதே நிபுணர்கள் சொல்லும் வழி. இதன் மூலம் உங்கள் டெஸ்க்டாப்பும் குழப்பம் இல்லாமல் தூயமையாக காட்சி அளிக்கும்.
எல்லாம் சரி தான், என்ன இருந்தாலும் டெஸ்க்டாப்பில் கோப்புகளை வைக்கும் வசதி வராது என்று நினைத்தால், ஷார்ட்கட் சேவையை பயன்படுத்தலாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய கோப்புகளாக இருந்தால் அவற்றுக்கு ஷார்ட்கட் உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்துக்கொள்ளலாம். ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் ஷார்ட்கட் கோப்பு தான் பாதிக்கப்படும் , மூல கோப்பு பாதுகாப்பாகவே இருக்கும்.