டிவிட்டருக்கு வயது ஐந்து;வாழ்த்தாக‌ 100 வது பதிவு.

காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்? குறும்பதிவு சேவையான டிவிட்டர் அறிமுகமான போது பல‌ரும் கேட்ட கேள்வி தான்.

ஆனால் இந்த ஆரம்ப கேள்விகளை மீறி டிவிட்டர் இணைய உலகில் வெற்றிக்கொடி நாட்டியிருப்பதோடு தவிர்க்க இயலாத இணைய சேவையாகவும் ஆங்கீகாரம் பெற்றுள்ளது.இன்று இணையம் என்றாலே பேஸ்புக்,டிவிட்டர் ஆகிய இரண்டு வலைப்பின்னல் சேவைகளுமே முதலில் குறிபிடப்படுகின்றன.

தேர்தல் நேரத்தில் யாராவது ஒரு பிரபலம் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அது எப்படி செய்தியாகுமோ அப்படியே பிரப‌லங்கள் டிவிட்டரில் நுழைவது என்பது செய்தியாகிறது.ஆஸ்கர் விருது விழவோ,ஜப்பான் சுனாமியோ செய்திகளை பகிர்ந்து கொள்வதில் முன்னணியில் இருப்பது டிவிட்டர் தான்.

சில மாதங்களுக்கு முன் எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்த போதும் டிவிட்டர் முக்கிய பங்காற்றியது.அதற்கு முன்னோட்டமாக டுனிஷியாவில் நடைபெற்ற புரட்சிக்கும் டிவிட்டர் தான் கைகொடுத்தது.பின்னர் அரபு நாடுகளில் மாற்றத்துக்கான அலை விசிட செய்ததும் டிவிட்டர் தான்.இதற்கு முன்பே ஈரானில் அரசு அடக்குமுறையை மீறி எதிர்ப்பு குரல் கேட்க உதவியதும் டிவிட்டர் தான்.

டிவிட்டரை பயன்படுத்துபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற‌னர்.தினந்தோறும் வெளியாகும் டிவிட்டர் பதிவுகளும் அதிகரித்து வருகிற‌து.200 மில்லியன் டிவிட்டர் பயனாளிகள் இருப்பதாகவும்,அவர்கள் தினமும் 140 மில்லியன் முறை டிவிட்டர் பதிவுகளை வெளியிடுவதகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஐந்து ஆண்டுகளில் இத்தகைய அசுர வளர்ச்சி என்பது வியப்பானது தான்.ஆம் 2006 ம் ஆண்டு மார்ச் 21 ம் தேதி உதய‌மான டிவிட்டர் ஐந்து அற்புதமான ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிற‌து.

டிவிட்டரின் இணை நிறுவனரான ஜேக் டோர்சே ;என்னுடைய டிவிட்ட்ரை துவ‌க்குகிறேன் என்னும் பொருள்பட 24 எழுத்துக்களில் வெளியிட்ட பதிவே டிவிட்டரின் முதல் பதிவாக அமைந்தது.அதன் பிறகு 140 எழுத்துக்களில் கருத்துக்களை வெளியிடுவது என்பது இணைய உலகின் சுருக்கெழுத்தாக மாறிவிட்டது.

டிவிட்டரின் புகழ் மற்றும் வளர்ச்சி இதே செல்வாக்கோடு தொடருமா என்னும் கேள்வி எழுப்பப்பட்டாலும் இணைய உலகின் இன்றிய‌மையாத சேவையாக டிவிட்டர் உருவாகியிருப்பதை மறுப்பதற்கில்லை.

எனவே டிவிட்டரின் ஆதிக்கம் தொடருமா,வேறு புதிய சேவை டிவிட்டரை முந்துமா என்னும் விவாததை எல்லாம் தள்ளி வைத்து விட்டு டிவிட்டரின் வெற்றியை கொண்டாடலாம்.

டிவிட்டருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறலாம்.டிவிட்டரை பாராட்டி ஒரு குறும்பதிவு வெளியிடலாம்.டிவிட்டர் பயன்படும் விதங்க‌ளை நினைத்து பார்க்கலாம்.இன்னும் பல விதங்களில் டிவிட்டரின் பிறந்த தினத்தை அதன் பயனாளிகளும் அபிமானிகளும் கொண்டாடி மகிழலாம்.

டிவிட்டர் தன் பங்கிற்கு 5 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஒரு புதிய இணையதளத்தை அமைத்துள்ளது.டிஸ்கவர்.டிவிடர்.டாட்.காம் என்னூம் அந்த தளம் பிரபலமான டிவிட்டர் பயனாளிகளை அறிமுகம் செய்கிறது.கலை,சினிமா,தொழில்நுட்பம்,குடும்பம்,அறிவியல்,விளையாட்டு உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் டிவிட்டர் பிரபலங்களை இந்த தளம் அறிமுகம் செய்கிறது.

டிவிட்டரி பயன்படுத்தும் நட்சத்திரங்களை மிக எளிதாக இந்த இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

அதிக ஆர்ப்பட்டம் இல்லாமல் இந்த தளம் மிக எளிதாக அமைந்துள்ளது.

டிவிட்டர் பயன்பாடு என்னும் போது இந்திய அளவில் நினைவு கொள்ள வேண்டிய விஷ்யம் மும்பை தீவிரவாத தாக்குதலின் போது தகவல்களை வெளியிடவும் பரிமாறிக்கொள்ளவும் டிவிட்டர் முக்கிய பங்காற்றியது தான்.தாக்குதல் நடந்த பகுதியில் இருந்தவர்கள் நேரடி அனுபவத்தை ப‌கிரவும் டிவிட்டர் உதவியது.

தமிழ‌கத்தை பொருத்தவரை இலங்கை கடற்படையால் தமிழக‌ மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்து ஒரு இணைய இயக்கத்தை உருவாக்க டிவிட்டர் உதவியதை பெருமையோடு நினைவு கூறலாம்.

இணையதள முக‌வரி;http://discover.twitter.com/

(பின்குறிப்பு;டிவிட்டர் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன்.இது டிவிட்டர் தொடர்பான 100 வது பதிவு.தற்செய்லாக டிவிட்டரின் 5 வது பிறந்த நாள் தொடர்பானதாக இந்த‌ பதிவு அமைவதில் எனக்கு மகிழ்ச்சியே.)

6 responses to “டிவிட்டருக்கு வயது ஐந்து;வாழ்த்தாக‌ 100 வது பதிவு.

பின்னூட்டமொன்றை இடுக